புதுடில்லி: சிறுதானியம் வகை உணவின் முக்கியத்துவத்தை கூறும் வகையில், ஜி20 விருந்தினர்களுக்கு சிறுதானியம் வகை உணவை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத்தொடர் டிச., 7ம் தேதி துவங்கிய நிலையில், மொத்தம் 23 நாள்கள் 17 அமர்வுகளாக வரும் டிச., 29 வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், இந்திய – சீனா எல்லையில் வீரர்கள் மோதிக் கொண்ட விவாகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
பாஜ., பார்லிமென்ட் குழுக் கூட்டம்:
இந்நிலையில், பார்லி மென்டில் வரும் நாள்களில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து, பாஜ., எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜ., பார்லிமென்ட் குழுக் கூட்டம் இன்று (டிச.,20) நடைபெற்றது.

பங்கேற்பு:
இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, முரளீதரண், பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஐ.நா.வுக்கு இந்திய அரசு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், 2023ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியம் ஆண்டாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுதானியம் உணவு வகைகளில் உள்ள ஊட்டச்சத்து குறித்து பிரசாரம் செய்ய பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், சிறுதானியம் வகை உணவின் முக்கியத்துவத்தை கூறும் வகையில், ஜி20 விருந்தினர்களுக்கு சிறுதானியம் வகை உணவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்