மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு!

வெளி நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால், அனைத்து மாநில அரசுகளும், கொரோனா வைரஸ் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதை அடுத்து யாராலும் மறுக்க முடியாது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் சீன மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதம் பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், வெளி நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால், அனைத்து மாநில அரசுகளும், கொரோனா வைரஸ் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதி உள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளதாவது:

ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா, பிரேசில் மற்றும் சீனா போன்ற நாடுகளில், கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதன் காரணமாக கொரோனா பரிசோதனையை அனைத்து மாநில அரசுகளும் தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்ட வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும். இதன் மூலம் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டால் அதை தொடக்கத்திலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நாளை, சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.