ராணிப்பேட்டை மாவட்டத்தில் 19 துணை சுகாதார நிலையங்களை அமைக்க சன் டி.வி. 2 கோடியே 22 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாகத் தொடங்கப்பட்ட சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி சார்பில், ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்தில் 19 துணை சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கு 2 கோடியே 21 லட்சத்து 64 ஆயிரத்து 450 ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 6 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் இந்த துணை சுகாதார நிலையங்களுக்கான பொதுமக்களின் பங்களிப்பான மூன்றில் ஒரு பங்குத் தொகையை சன் டி.வி. அளித்துள்ளது.
இதற்கான காசோலையை, கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் ஆகியோரிடம் சன் டி.வி. சார்பில் காவேரி கலாநிதி மாறன் அளித்தார். ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சன் டி.வி. மேற்கொண்டுள்ள பணிகளைப் பாராட்டுவதாக அமைச்சரும் மாவட்ட ஆட்சியரும் தெரிவித்தனர். ஏழை எளியோருக்கு கல்வி, அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல், தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக சன் டிவியும் சன் பவுண்டேஷனும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன. இத்திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. இணைந்து இதுவரை 170 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.