ஃபேஸ்புக்… அப்படி ஒரு விஷயமே நடக்கல: மழுப்பும் மத்திய அரசு!

போலி கணக்குகள் பற்றி ஃபேஸ்புக் பணியாளர்கள் அம்பலப்படுத்திய செய்தி குறித்து ரவிக்குமார் எம்.பி., எழுப்பிய கேள்விக்கு ஃபேஸ்புக் பற்றிய எந்த ஒரு செய்தியும் சமீபத்தில் அரசாங்கத்தின் கவனத்திற்கு வரவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், “ ஃபேஸ்புக் பற்றி சமீபத்தில் வெளியான சில செய்திகள்பற்றி அரசாங்கம் அறிந்திருக்கிறதா? அப்படியானால், அதன் விவரங்கள்; செய்திகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்பட முன்மொழியப்பட்ட நடவடிக்கை; ஃபேஸ்புக் பற்றி வெளியான செய்திகள் மற்றும் அதன் தாக்கம் குறித்து எந்த சட்ட ஆலோசனையும் கோரப்பட்டதா? அப்படியானால், அதன் விவரங்கள்; இல்லையென்றால், அதற்கான காரணங்களை தருக? ஃபேஸ்புக் வெளிப்படுத்திய செய்தியின் அடிப்படையில் 2000 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தைத் திருத்துவதற்கு ஏதேனும் முன்மொழிவுகள் உள்ளதா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?” ஆகிய கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “சட்ட ஆலோசனை பெற வேண்டிய அளவுக்கு ஃபேஸ்புக் பற்றிய எந்த ஒரு செய்தியும் சமீபத்தில் அரசாங்கத்தின் கவனத்திற்கு வரவில்லை. எனவே மற்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் தேவை எழவில்லை.” என பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி., கூறுகையில், “கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் முன் பிரான்சிஸ் ஹவ்ஜென் என்ற ஃபேஸ்புக்கின் முன்னாள் பணியாளர் அளித்த சாட்சியத்தின் மூலமும், “தி ஃபேஸ்புக் பேப்பர்ஸ்” என்று அவர் மூலம் கசிந்த உள் ஆவணங்களின் அடிப்படையில் தொடர்ச்சியாக வெளியான அறிக்கைகள் மூலமாகவும், ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தீங்கு விளைவிக்கும் விஷயங்கள் குறித்து அது தெளிவாக அறிந்திருந்தது என்பது வெளிச்சத்திற்கு வந்தது. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 2.5 மணி நேர விசாரணையின்போது, ஃபேஸ்புக் பாதுகாப்பைவிடவும் வளர்ச்சிக்கே முன்னுரிமை அளிக்கிறது என்று ஹவ்ஜென் கூறினார். குறிப்பாக உலகின் வளரும் நாடுகளில் பயனர்களிடையே பிரிவினையை வளர்க்காமல் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான மொழி மற்றும் கலாச்சார நிபுணத்துவம் கொண்டவர்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தில் இல்லை எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக விவரங்கள் கேட்டு இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியது.” என்றார்.

ரவிக்குமார் எம்.பி

தொடர்ந்து பேசும் ரவிக்குமார் எம்.பி., “ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறிய அந்நிறுவனப் பணியாளர் ஸோபி ஷாங் என்பவர் வெளியிட்ட ஆவணங்களில் இந்தியாவில் இயங்கும் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஐந்து போலி நெட்வொர்க்குகளை கண்டுபிடித்ததாக கூறப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) ஆகியவற்றுக்கு தலா இரண்டு மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு (AAP) ஒன்று என போலி நெட்வொர்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் நான்கு நெட்வொர்க்குகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அகற்றப்பட்டன். ஆனால், பாஜக எம்.பி., வினோத் குமார் சோங்கருடன் தொடர்புடைய நெட்வொர்க் அகற்றப்படவில்லை.

இது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு எடுத்த முயற்சிகளுக்கும் பாஜக அரசு ஒத்துழைப்பு தரவில்லை. இந்தப் பின்னணியிலேயே நான் கேள்வி எழுப்பினேன். ஆனால் அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை என்பதுபோல மழுப்பலாக அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.” என்று ரவிக்குமார் எம்.பி., கூறுகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.