சோமனூர் அருகே கிட்டாம்பாளையம் ஊராட்சியில் அமைக்கப்படும்; தொழிற்பேட்டை மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலை: அமைச்சர் தா.மோ. அன்பரசன் உறுதி

சோமனூர்: சோமனூர் அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சியில் அமைக்கப்படும் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டை மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என  தமிழ்நாடு ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  தெரிவித்தார். கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம் ஊராட்சியில் 316 ஏக்கர் பரப்பளவில் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டை மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு தமிழ்நாடு ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி  பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக கூட்டுறவு தொழிற்பேட்டை பணிகள் தமிழகம் முழுவதும் கிடப்பில் போடப்பட்டிருந்தது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் நலிவடைந்த தொழிலையும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் வளர்ச்சிப் பாதையில் செயல்பட்டு வருகிறது. கிட்டம்பாளையத்தில் அண்ணா தொழிற்பேட்டை அமைக்க 2006ல் 316 ஏக்கர்  நிலம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது ரூ.24.61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வருடத்தில் 585 தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும். ஆசியாவிலேயே மிகப்பெரிய கூட்டுறவு தொழில் பூங்காவாக இது இருக்கும். இதன் மூலம் நேரடியாக 15 ஆயிரம் தொழிலாளர்கள், மறைமுகமாக 35 ஆயிரம் தொழிலாளர்கள் என 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.  இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.