மதுரை மாவட்டத்தை அடுத்த மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் அடுத்த அம்பலக்காரன்பட்டி வல்லடிக்காரர் கோவிலுக்குள் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது கிராம மக்களுடன் மு.க அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்பொழுது கோயில் கதவுகள் அடைக்கப்பட்டதால் பொது மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து அப்போதைய தேர்தல் அதிகாரியும் தாசில்தாரமான காளிமுத்து தலைமையிலான தேர்தல் அலுவலர்கள் கோயிலுக்குள் சென்று அங்கு நடந்த நிகழ்வுகளை படம் பிடித்தனர். இந்த சம்பவத்தின் பொழுது மு.க அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் மு.க அழகிரி மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த இந்த வழக்கு இன்று மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி லீலா பானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கில் தொடர்புடைய மு.க அழகிரி உட்பட 20 பேர் நேரில் ஆஜர் ஆகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். பிறகு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மு.க அழகிரி படியில் இறங்கும்பொழுது தடுமாறி கீழே விழ பார்த்தார்.
அப்பொழுது அருகில் இருந்த திமுகவின் உடன்பிறப்புகள் தாங்கி பிடித்தனர். மு.க அழகிரி தடுமாறியதை பார்த்த உடனிருந்தவர்கள் சற்றே பதறிப் போனார்கள். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் காரில் ஏறி சென்றார். முன்னதாக மு.க அழகிரியை நிதி அமைச்சர் பி.டி.ஆரின் ஆதரவாளர் விசா பாங்கின் தலைமையிலான திமுகவினர் மு க அழகிரியை வரவேற்று சிறிது நேரம் சந்தித்து பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.