தனுஷ் படத்தை வாங்கி ஏமாறாதீர்! பட வினியோக நிறுவனம் எச்சரிக்கை

தனுஷ் நடித்த, ‛வாத்தி' படம் தமிழ், தெலுங்கு என, இரு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் வம்சி தயாரிக்க, வெங்கி அட்லுாரி இயக்கி உள்ளார். படம் அடுத்தாண்டு வெளியாகிறது. இதனிடையே, வாத்தி படத் தயாரிப்பாளருடன், 'ஆரண்யா சினி கம்பைன்ஸ்' போட்ட ஒப்பந்தம், நீதிமன்றம் சென்றுள்ளது. 'வாத்தி படத்தை யாரும் வாங்கி ஏமாற வேண்டாம்' என, வினியோக நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, ஆரண்யா சினி கம்பைன்ஸ் அறிக்கை: வாத்தி படம் டிச.,2ல் வெளியாகும் என்றபோது, ஐந்து ஏரியாக்களுக்கு படத்தை வெளியிட, 8 கோடி ரூபாய் ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டு, அக்.,18ல் ஐந்து கோடி ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டது. தீபாவளிக்கு பின் ஒப்பந்தம் போடலாம் என, தயாரிப்பு தரப்பு கூறியது. ஆனால், குறிப்பிட்டபடி ஒப்பந்தமும் போடவில்லை; படத்தையும் குறிப்பிட்ட தேதியில் வெளியிடவும் இல்லை. இதனால், முன்பணத்தை திருப்பித் தரக் கோரினோம்.

வட்டியின்றி தர சம்மதித்த தயாரிப்பு தரப்பு, நவ., 23ல் 2 கோடி ரூபாய் மட்டும் கொடுத்தது. நவ.,26ல் 1 கோடி ரூபாய் தருவதாக கூறினர்; தரவில்லை. இந்நிலையில், படத்தை பிப்., 17ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். படத்தை நாங்களே வெளியிட முடிவு செய்து, தயாரிப்பு தரப்பை அணுகினோம்; உரிய பதில் இல்லாததால் நீதிமன்றம் சென்றுள்ளோம். காப்புரிமை சட்டப்படி, தற்போதைய நிலையில், வாத்தி படத்தின் ஐந்து ஏரியா வினியோக உரிமை, ஆரண்யா சினி கம்பைன்ஸ் வசம் உள்ளதால், இடைத்தரகர்கள் பேச்சைக் கேட்டு, வினியோகஸ்தர்கள் யாரும் ஏமாற வேண்டாம். இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.