நம்ம ஸ்கூல் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்; கல்வி பாதுகாப்பு குழு கோரிக்கை.!

இது குறித்து அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக அரசாங்கம் நம்ம ஸ்கூல் திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்த கையோடு, அதை அதிரடியாக நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலமாக தனியார் தொழில் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை நேரடியாகத் தத்தெடுக்கலாம் அல்லது பல்வேறு கட்டுமான அமைப்புகளை ஏற்படுத்தித் தரலாம் அல்லது முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு உதவலாம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தனியார் நிதிப் பங்களிப்பபைப் பெற்று அரசுப் பள்ளிகளையும் அதன் கட்டுமானத்தையும் பலப்படுத்தப் போவதாகவும், மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்கப் போவதாகவும் காண்பிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளுக்கு நிதி அளிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கே உள்ளது என்பது ஒருபுறமிருக்க, தனியார் நிதிப் பங்களிப்பை அரசாங்கம் கோருவதை ஒரு வாதத்திற்காக நாம் ஏற்றுக் கொண்டாலும் கூட, அந்நிதிப் பங்களிப்பை பெற்று அதை அரசாங்கமே நிர்வாகம் செய்யும் இடத்தில் நிலைமை வேறு.

ஆனால் நம்ம ஸ்கூல் திட்டத்தில் தனியார் நிதிப் பங்களிப்பை நிருவகிக்கக்கூடிய பொறுப்பையும் தனியார் கையில் கொடுத்திருப்பதானது, அரசுப் பள்ளிகளை நிச்சயமாக தனியார்மயத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்பது கேள்விக்கு அப்பாற்பட்ட வகையில் இருக்கிறது. மேலும், பல ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வகுப்பறைகள் கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளி கட்டுமான அமைப்புகள் சிதைவுற்றிருக்கும் நிலையில், தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தற்காலிகப் பணியில் ஆசிரியர்கள் பணியாற்றிவரும் நிலையில்,

நிரந்தர அடிப்படையில் ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்யாத நிலையில், அவற்றையெல்லாம் சரி செய்ய அரசு போதுமான நிதி ஒதுக்கி ஆவண செய்யும் என ஆசிரியர்களும் பெற்றோர்களும் பொதுமக்களும் எதிர்பார்த்திருந்த வேளையில், அரசுப் பள்ளிகளைக் கைகழுவி படிப்படியாகத் தனியார்வசம் ஒப்படைக்கக் கூடிய விதத்தில் நம்ம ஸ்கூல் திட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது கல்வி மீது அக்கறை கொண்ட அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

1990களில் கொண்டுவரப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் (SSA) உள்ளிட்டவை பொது மற்றும் தனியார் பங்களிப்பு (Public Private Partnership – PPP) என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை படிப்படியாகத் தனியார் வசம் ஒப்படைக்க பல்வேறு செயல்முறை நடவடிக்கைகளை ஏற்கனவே தொடர்ந்து எடுத்து வந்தன.

டாக்டர்.பாலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 இல் கூறப்பட்டுள்ளது போல், அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக தனியார் சமூக பங்களிப்பு (Corporate Social Responsibility) என்ற வகையில் அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கலாம் என்றும் முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிக்குப் போதுமான நிதி உதவி செய்யலாம் என்று அதே அம்சங்களைப் பின்தொடர்ந்து நம்ம ஸ்கூல் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது.

இந்த நம்ம ஸ்கூல் திட்டம், மக்கள் வரிப்பணத்தில் இதுநாள் வரை செயல்பட்டு வந்த அரசுப் பள்ளிகள் மீதான இறுதி தாக்குதல் ஆகும். தமிழ்நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் ஒரே நம்பிக்கை ஆதாரமாகத் திகழ்ந்துவரும் அரசுப் பள்ளிகளைப் படுவேகமாகத் தனியார்மயமாக்கும் இந்த முயற்சி வன்மையாகக் கண்டிக்கதக்கது. இத்திட்டத்தைத் தமிழக அரசாங்கம் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.