டெல்லி: நாடு முழுவதும் 60 நாட்களில் 1.6 லட்சம் கிலோ சட்டவிரோத போதை பொருட்கள் அழிக்கப்பட்டு உள்ளன என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாட்டில் அதிகரித்து வரும் போதை பொருட்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. சமீப காலங்களாக வெளிநாடுகளில் இருந்து போதை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பேசும்போது:
வளைகுடா நாடுகளில் இருந்து போதை பொருட்கள் இந்தியாவுக்குள் வருகின்றன. போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படுகின்றனர். அந்த தொழிற்சாலைகள் சீல் வைத்து மூடப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், 12 மாநிலங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. கடத்தல் கும்பலும் கைது செய்யப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.
75 ஆயிரம் கிலோ போதை பொருட்களை அழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, கடந்த 60 நாட்களில் 1.6 லட்சம் கிலோ எடை கொண்ட,சட்டவிரோத போதை பொருட்கள் அழிக்கப்பட்டு உள்ளன என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். போதை பொருள் ஒழிப்புக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவானது ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த தரவுகளை பகுப்பாய்வு செய்து வருகிறது என்றும் அமித்ஷா கூறினார்.