பிரசித்தி பெற்ற நெல்லை, தென்காசி பொங்கல் பானைகளுக்கு ‘மவுசு’

பொங்கல் பானை: பொங்கல் நெருங்குவதையொட்டி தமிழ்நாட்டில் மண் பாண்ட உற்பத்திகள் சூடுபிடித்துள்ளன. வெளிநாடுவாழ் தமிழர்கள் பொங்கலை கொண்டாடுவதற்கான பானைகளை நெல்லையில் இருந்து வாங்கி வருகின்றனர். நெல்லை, தென்காசி பானைகளுக்கு அப்படியென்ன மவுசு என்பதை வாங்க பார்க்கலாம்.!

மேற்குத் தொடர்ச்சி மலை, தாமிரபரணி ஆறு, எப்போதும் வீசும் குற்றாலச்சாரல் என கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மண்பாண்டங்களை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி இந்தப் பணி சூடுபிடித்துள்ளது. 

தமிழ்நாடு மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பானை வைத்து பொங்கலிட்டு சூரியனை வழிபடும் தமிழர்கள், அதற்கான பானைகளை நெல்லை, தென்காசியில் இருந்து வாங்கி வருகின்றனர். இந்தப் பானைகளுக்கு அப்படியென்ன மவுசு என பார்த்தால், வேறென்ன…நெல்லை, தென்காசியின் அடையாளமான தாமிரபரணி ஆறு தான். 

தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மண்ணில் தயார் செய்யப்படும் இந்த வகை பானைகளை, வெளிநாடுவாழ் தமிழர்கள் அதிகளவு விரும்பி வாங்கி வருகின்றனர். 

குறிப்பாக, நெல்லை மேலப்பாளையம் குறிச்சிப் பகுதியில் செய்யப்படும் பானைகள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. வெறும் பானை உற்பத்திகளில் மட்டும் மேலப்பாளையம் குறிச்சிப் பகுதி தொழிலாளர்கள் ஈடுபடவில்லை. அவர்களின் நேர்த்தியான கைவண்ணத்தில் உருவாக்கப்படும் தேநீர் கோப்பைகள், தண்ணீர் குப்பிகள், அலங்கார பூச்சட்டிகள், சாம்பிராணி கிண்ணம், பிரியாணி சட்டி உள்ளிட்ட பல பொருட்களுக்கு வெளிநாடுகளில் அவ்வளவு கிராக்கியுண்டு. 

தாமிரபரணி மண்ணில் செய்யப்படும் இதுபோன்ற கலைப்பொருட்கள் மலேசியா, சிங்கப்பூர் மட்டுமின்றி சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட 12 வளைகுடா நாடுகளுக்கு கண்டெய்னர்களில் அனுப்பிவைக்கப்படுகின்றன. கொரோனா காலங்களில் 600க்கும் குறைவான ஆர்டர்களே வந்த நிலையில், தற்போது ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும் மேலப்பாளையம் குறிச்சிப் பகுதியைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

அப்படியென்ன இருக்கிறது இந்த பானைகளில் என கேட்டால், ‘எங்கள் தாமிரபரணியின் மணம்’ என நெகிழ்கிறார்கள் உள்ளூர் மக்கள். இதில் சமைக்கப்படும் உணவின் ருசியும், தரமும் பலரையும் கவர்ந்து வருவதால் தற்போது பானைகளுக்கு மூலிகைப் பூச்சுகளால் ஆன ஓவியம், வர்ணங்கள் என அடுத்தக்கட்டத்துக்கு தொழிலாளர்கள் நகர்ந்து வருகின்றனர். 

க்ரியேட்டிவ்வான இந்த வகை பானைகளை உருவாக்க மதுரையில் இருந்து சிற்பக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலமாக ஓவியங்கள் வரையப்பட்டு வருவதாகவும், பெட்டிபெட்டியாக லாரிகளில் அனுப்பிவைக்கப்பட்டு கண்டெய்னர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் முருகன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.