அதிவேகமாக பரவும் புதிய வகை கொரோனா: மோடி நடத்தும் ஆலோசனை!

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுடன் இன்று மதியம் ஆலோசனை நடத்துகிறார்.

சீனா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் (பிஎப்7 வைரஸ்) அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த புதிய வகை கொரோனா பரவல் இந்தியாவில் ஏற்படாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உயர் அதிகாரிகளுடன் இன்று மதியம் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த வகை வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ள நிலையில் ஆரம்பத்திலேயே அதைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாநில அரசுகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கொரோனா பரிசோதனைகளை வேகப்படுத்த வேண்டும். பாதிப்பு உறுதியானால் அவர்களது மாதிரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் புதிய வகை வைரஸை ஆரம்பத்திலேயே எப்படி தடுப்பது, வெளிநாட்டிலிருந்து விமானங்கள் மூலம் வரும் பயணிகளுக்கு எவ்வாறு பரிசோதனைகளை மேற்கொள்வது, உள்நாட்டில் பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்படும். அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்கிறார்கள்.

முகக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளியை பேணுதல் அவசியம் போன்ற அடிப்படையான கட்டுப்பாடுகளை முதலில் அமல்படுத்தி பின்னர் நிலைமைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக 2020ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய போது, பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி பொது முடக்கத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பது, குறைவதை பொறுத்து கட்டுப்பாடுகளும் தளர்வுகளும் அமலுக்குவந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.