எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்த தனி குழு – உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்த தனிக்குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே கல்வி உதவித் தொகை வழங்க உத்தரவிடக்கோரி பி.வேதாச்சலம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது. அரசு சார்பில் வாதிட்டபோது, “தமிழக அரசு 2015-2016 நிதியாண்டில் ரூ.1128.53 கோடி ஒதுக்கியது. அதேநேரம், ரூ.1191 கோடி வரை கூடுதலாக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “பொருளாதார சிக்கல்களால் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அப்படியிருக்கும் திட்டம் உரிய காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.

எனவே, வருங்காலங்களில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தை முறையாக செயல்படுத்தவும், தகுதியான எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு உரிய காலத்தில் கல்வித் தொகை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும் சமூக நீதித்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.