காந்தாரா பார்ட் 2 உண்டு ; தயாரிப்பாளர் உறுதி

மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களின் ஹீரோக்கள், இயக்குனர்களிடம் அந்த படத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறதா, எப்போது எடுக்கப்போகிறீர்கள் என்கிற கேள்விகள் கேட்பது தற்போது ஒரு பேஷன் ஆகவே மாறிவிட்டது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மற்ற தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் கூட இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 400 கோடிக்கு மேல் வசூலித்து இந்திய திரையுலகில் ஒரு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதனால் எப்படி கேஜிஎப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்ற பின்னர், அந்த படத்திற்கு கிடைத்த எதிர்பார்ப்பு காரணமாக கேஜிஎப் 2 படம் தயாரானதோ, அதேபோல காந்தாரா படத்திற்கும் இரண்டாம் பாகம் இருக்கிறதா என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். காந்தாரா படம் சம்பந்தப்பட்டவர்களிடம் கூட இந்த கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான விஜய் கிரகந்தூரிடம் இதுபற்றி கேட்கப்பட்டபோது, நிச்சயமாக இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறது அது இக்கதையின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம் அல்லது இக்கதையின் முன்பகுதியாகவும் இருக்கலாம். ரிஷப் ஷெட்டி தற்போது சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அவர் வந்தபின் இதுகுறித்து பேச இருக்கிறோம். அதேசமயம் இந்தப்படம் உடனடியாக துவங்குவதற்கு வாய்ப்பு இல்லை. இன்னும் ஒரு சில படங்களில் நாங்கள் இணைந்து பணியாற்ற இருக்கிறோம். அதன்பின்னரே இந்த இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் துவங்கும்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.