டிமானிடைசேஷன் (Demonetisation) என்ற வார்த்தையைக் கேட்டால் பயமாக இருக்கிறது. 2016 நவம்பர் 8 இரவு நேரம் இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற ஓர் அறிவிப்பு. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இப்பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

பாதி இரவில் ஏடிஎம் வாசல்களில் அலையலையாய் மக்கள் நின்ற தருணங்கள் இன்றும் மறக்க முடியாதவை. ஆனால், மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வருமா என்று சிந்திக்கும்போதே பக் என்று இருக்கிறது.
ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகமானால் மீண்டும் பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்படுமா என எம்.பி ராஜீவ் சுக்லா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, “டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை நோக்கி மத்திய அரசு நகர்கிறது. நாட்டின் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் அதிகரித்தாலும், மற்றொரு பணமதிப்பிழப்பு திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளாது.
பணப்புழக்கத்தைக் குறைக்கவே 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை ஏற்க முடியாது. கருப்புப் பணத்தை ஒழிக்கவே ஏற்படுத்தப்பட்டது.

அதிகரித்து வரும் போலி ரூபாய் நோட்டுகளைக் கட்டுப்படுத்து வதுவதே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் ஆகும். கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைப்பதைத் தடுக்கவும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் போன்ற நாசகர நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கப் போலி பணத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது’’ என்றார்.