சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல்

பெய்ஜிங்,

சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் சீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. அதே சமயம் கொரோனா பாதிப்புகளை சீன அரசு முறையாக பதிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே சீனாவில் இனி அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்புகளை பதிவு செய்யப்போவது இல்லை என சீன சுகாதாரத்துறை அறிவித்தது. பெரிய அளவில் கொரோனா சோதனைகளை நடத்த வேண்டி இருப்பதாலும், பாதிப்பு எண்ணிக்கையை பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள் காரணமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் நேற்றும் முன்தினம் சீனாவின் தேசிய சுகாதாரத்துறை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் சீனாவில் இந்த வாரம் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்க வாய்ப்புள்ளதாக ‘புளூம்பெர்க்’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதில் 2.48 கோடி பேருக்கு டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் கொரோனா பாதிப்பு பரவி இருக்கக் கூடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்படும் பட்சத்தில் சீனாவில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட பாதிப்பை விட மிக அதிகமான பாதிப்பு எண்ணிக்கையாக இது பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.