எழும்பூர் ஸ்டேஷன்: வாவ், வாட் ஏ ப்யூட்டி… மூனே வருஷம்… திக்குமுக்காடப் போகும் சென்னை!

தலைநகர் சென்னையின் அடையாளங்களில் சென்னை சென்ட்ரலுக்கு அடுத்தபடியாக திகழ்வது எழும்பூர் ரயில் நிலையம். ஆங்கிலேயர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக 144 ஆண்டுகளாக தலைநிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது. இது தெற்கு ரயில்வேயின் இரண்டாவது பெரிய ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை உடையது. ஒரே நாளில் 562 ரயில்கள், ஒரே சமயத்தில் 24,600 பயணிகள் என பரபரவென இயங்கி கொண்டிருக்கிறது.

உலகத்தரத்தில் கட்டுமானம்

இந்த ரயில் நிலையத்தை உலகத்தரத்தில் மாற்றினால் என்ன? என்ற கேள்வி தெற்கு ரயில்வேக்கு தோன்றியுள்ளது. உடனே அதற்கான வேலைகளை முடுக்கிவிட மிகப்பெரிய திட்டம் உருவானது. 734.91 கோடி ரூபாய் பட்ஜெட். 36 மாதங்கள் இலக்கு. ஒட்டுமொத்த தமிழகமும் திக்குமுக்காடும் வகையில் ஒரு ரயில் நிலையத்தை கட்டி எழுப்ப அச்சாரம் போடப்பட்டு விட்டது.

டெண்டர் விடப்பட்டது

டெண்டர் கோரப்பட்டு நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டு முதல்கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. நிலப்பரப்பு கணக்கெடுப்பு ஒருபுறமும், மண் பரிசோதனைக்காக ஆழ்துளை சோதனை மறுபுறம் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் அருகிலுள்ள ரயில்வே குடியிருப்புகளை அகற்றும் பணிகளும், தரைத்தள அலுவலக கட்டுமானமும் நடந்து வருகிறது. இதுதான் இன்றைய தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது.

களமிறங்கும் நிறுவனங்கள்

மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஐதராபாத்தை சேர்ந்த டி.இ.சி இன்ப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனம், மேற்பார்வையிட மும்பையை சேர்ந்த டாடா பொறியாளர் ஆலோசனை நிறுவனம். பக்காவாக ஸ்கெட்ச் போடப்பட்டு களப்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலையம் மூன்று ஆண்டுகளுக்கு இப்படித்தான் இருக்கப் போகிறது என்று தெற்கு ரயில்வே சில புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையம்

கண் கொட்டாமல் பார்க்கும் அளவிற்கு அவ்வளவு அழகு. நவீன கட்டடக் கலையின் அடையாளம். புதிய தொழில்நுட்ப வசதிகள் உடன் கூடிய லேட்டஸ்ட் வசதிகள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நவீன விமான நிலையம் போல என சுருக்கமாக சொல்லிவிடலாம். மொத்தம் 1.35 லட்சம் சதுர மீட்டரில் ரயில் நிலைய கட்டிடம் அமையவுள்ளது.

என்னென்ன வசதிகள்?

பயணிகள் வருகை, புறப்பாடு ஆகியவற்றுக்கு தனித்தனி அரங்குகள், பார்சல்களை கையாள தனிப்பகுதி. இதுதவிர நடை மேம்பாலங்கள், அடுக்கடுக்கான பார்க்கிங் வசதிகள், எஸ்கலேட்டர், லிப்ட்கள், கழிவறைகள், குடிநீர் குழாய்கள், மேற்கூரைகள், இருக்கைகள் உள்ளிட்டவை வரவுள்ளன.

பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்களில் வரும் பயணிகள் எளிதில் ரயில் நிலையத்திற்கு வரும் வகையில் வெளி வளாகப் பகுதி அமைக்கப்படுகிறது. பயணிகள் காத்திருப்பு அரங்கு, வெளிப்புறப் பகுதி, வருகை, வெளியே செல்வது என எளிதான வசதிகள் செய்யப்படவுள்ளன. இன்னும் 3 ஆண்டுகளில் எழும்பூர் வேற லெவலுக்கு மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.