கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்ட பிரபு தலைமையில் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் குமரி மாவட்டத்தில் உள்ள மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் சந்தைகளில் செயல்படும் கடைகளில் பயன்படுத்தும் எடை கற்கள் மற்றும் தராசுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வில், முத்திரையிடாமல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வந்த பதினெட்டு மின்னணு தராசுகள், பத்து தராசுகள் மற்றும் முப்பத்துநான்கு எடை கற்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து உதவி ஆணையர் தெரிவித்ததாவது:- “முத்திரையிடுதல் உள்ளிட்ட பணிகள் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது என்பதால் முத்திரை கட்டணம் மற்றும் விண்ணப்பம் அனைத்தையும் ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
கடைகளில் முத்திரையிடப்படாத தராசுகளை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.