தேனி மாவட்டம் சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலைக்கு சென்றனர். பின்பு தரிசனம் முடிந்ததும் நேற்றிரவு ஆண்டிபட்டி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது இரவு 11.30 மணி அளவில் குமுளி-லோயர்கேம்ப் மலைப்பாதையில் மாதா கோவில் அருகே கார் வந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதை இருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் சிறுவன் உட்பட 11 பேர் பயணம் செய்த நிலையில், இந்த பயங்கர விபத்தில் சிக்கி 7 அய்யப்ப பக்தர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்த சிறுவன் உட்பட நான்கு பேரை மீட்டு சிகிச்சைக்காக குமுளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/RnPk2tmt6V
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 24, 2022
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், காயமடைந்த 2 நபர்களுக்கு தலா 50,00 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் அறிவித்துள்ளார்.