லாகூர்,
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குட்டா நகரில் ஷப்சல் என்ற பரபரப்பான சாலை உள்ளது. இந்த பகுதியில் இன்று மாலை வழக்கம்போல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன.
அப்போது, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டு திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அங்கு நின்றுகொண்டிருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். இதில், 3 பேர் பெண்கள் ஆகும்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். மேலும், படுகாயமடைந்த 4 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தலிபான்களின் கிளை பயங்கரவாத அமைப்பு தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.