தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ,விருத்தியடைந்த தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக பிரவேசித்துள்ளதுடன், அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்துவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நண்பகல் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாழமுக்கம் நாளையளவில் (டிசம்பர் 26ஆம் திகதி) இலங்கையின் மேற்குக் கடற்பரப்புகளுக்கு நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடுமுழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.