தமிழகத்திற்கு புதிய ஆபத்து – மீண்டும் அமலாகிறது கொரோனா கட்டுப்பாடுகள்?

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்த அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான அண்டை நாடான சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றின் தீவிரப் பரவலுக்கு, ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் உருமாறிய பிஎப் 7 வகை தொற்று காரணம் என தெரிய வந்துள்ளது. இதே போல், அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

பிஎப் 7 வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இதனை அடுத்து சர்வதேச விமான நிலையங்களில் ரேண்டம் பரிசோதனை செய்வது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அத்துடன் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்த அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர்கள் ஆகியோருக்கு தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

கொரோனா தடுப்பூசி மையங்கள் முழு நேரமும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர்கள் அவசர கால பயன்பாட்டிற்கு தயாராக வைக்க வேண்டும். N95 முகக்கவசம், பிபிஇ கிட், அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பை மதிப்பீடு செய்ய வேண்டும்.

வெண்டிலெட்டர்கள், சிபிஏபி கருவி, ஆக்சிஜன் செலுத்தும் கருவி உள்ளிட்டவை தயாராக உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். தேவைக்கேற்ப திரவநிலை ஆக்சிஜன் தயார் நிலையில் உள்ளதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆக்சிஜனை பிரித்து அளிக்கக்கூடிய கருவிகள் சரியாக செயல்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.