தொடர் விடுமுறையால் குவியும் சுற்றுலாப்பயணிகள் நெரிசலில் திண்டாடுது மூணாறு

மூணாறு : கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக மூணாறுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பல மடங்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் உருவான கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணிகள் பலரும் பெரும் அவதிக்குள்ளாயினர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ‘தென்னகத்து காஷ்மீர்’ என வர்ணிக்கப்படும் மூணாறுக்கு வழக்கமாகவே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாகவே இருக்கும்.

தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர் விடுமுறை மற்றும் தமிழகத்தில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக மூணாறுக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலாப்பயணிகள் வாகனங்களால் மலைச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.

தற்போது மூணாறில் பனிக்காலம் என்பதால் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இதனை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட், மாட்டுப்பட்டி, எக்கோ பாய்ண்ட் உட்பட பல்வேறு பகுதிகளிலும், கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையிலும் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பயணிகள் திட்டமிட்டபடி சுற்றுலாப் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அத்துடன் சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதால் மதிய உணவு கிடைக்காமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினர். மூணாறில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.