தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று பழனி மலை முருகன் கோவில். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பங்குனி உத்திரம், தைப்பூசம் என்று விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில், இந்த கோவிலில் வரும் ஜனவரி மாதம் 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனால், மலைக் கோவிலுக்கு செல்லும் பாதை மற்றும் யானைப்பாதையில் உள்ள மண்டபங்கள் என்று அனைத்தையும் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான வேலை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பணிகளுக்காக தள்ளுவண்டியில் செங்கல் மற்றும் மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை பணியாளர்கள் யானைப்பாதை வழியாக கொண்டு சென்றுள்ளனர். அப்போது தள்ளுவண்டி பணியாளரின் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு ஓடியது.
இதில் யானைப்பதை வழியாக மலைக்கோவிலுக்கு சாமி தசரினம் செய்ய சென்று கொண்டிருந்த பக்தர்கள் நான்கு பேர் மீது தள்ளுவண்டியில் இருந்த கற்கள் விழுந்ததில் பலத்தக் காயம் அடைந்தனர்.
இதைப்பார்த்த அருகிலுருந்தவர்கள் அவர்களை மீட்டு பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து பழனி அடிவாரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.