தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள விளாத்திகுளம் நாடார் வீதியை சேர்ந்த முனியசாமி மனைவி பத்மாதேவி (40) கணவரை பிரிந்து வசித்து வருகிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் 4 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கி இதுவரை 7 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
மாதம் 12 ரூபாய் வீதம் வட்டியாக கணக்கிட்டு கொடுத்துள்ளார். இந்நிலையில், 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வட்டி கேட்டு மிரட்டுவதாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மனமுடைந்துள்ளார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அந்த நபர் தான் கொண்டு வந்த பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து தலையில் தண்ணீரை ஊற்றினர். பின்னர், சிப்காட் போலீசார் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.