முதல்வர் கேசிஆருக்கு பின்னடைவு: எம்எல்ஏக்கள் பேரம் வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

தெலங்கானா மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் எம்.எல்.ஏ.,க்களை பணத்தாசை காட்டி கட்சி மாற பாஜக பேரம் பேசியது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில், முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி

நடக்கிறது. சட்டசபையின் மொத்தமுள்ள 119 இடங்களில், ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு 82 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். பாஜகவுக்கு 24 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில், ‘ஆப்பரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் ஆளும் கட்சி

எம்.எல்.ஏ.,க்களை பாஜகவுக்கு விலைக்கு வாங்கும் முயற்சி, தெலங்கானா மாநிலத்திலும் நடந்துள்ளதாக பிரச்னை எழுந்துள்ளது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.,க்களுக்கு, 250 கோடி ரூபாய் கொடுத்து கட்சி மாற நெருக்கடி கொடுக்கப்பட்டதாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை தெலங்கானா மாநில அரசு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இதில் பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக தெலங்கானா மாநில அரசு குற்றம் சாட்டியது. ஆனால் இதை பாஜக திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநில உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், சிறப்பு விசாரணைக் குழு கலைக்க வேண்டும் எனவும், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தெலங்கானா மாநில அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.