புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. தலைவர் ராகுல் காந்தி நேற்று (டிச.26) காலை மகாத்மா காந்தி நினைவிடம், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் அவர் இந்த நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எழுந்த விமர்சனங்கள், எதிர்ப்புகளை மீறி அவர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தி தலைவர்களில் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அது நேற்றுமுன்தினம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அது சாத்தியப்படாததால் நேற்று காலை ராகுல் காந்தி தலைவர்கள் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.
டெல்லியில் இப்போது குளிர்காலம் என்பதால் காலையில் கடும் குளிர் நிலவி வருகிறது. அந்த கடும் குளிரிலும், வெறும் டி-சர்ட் மட்டுமே அணிந்து அஞ்சலி செலுத்தினார் ராகுல் காந்தி. மற்ற காங்கிரஸ் தலைவர்கள் ஜாக்கெட்டுகள் மற்றும் மப்ளர்களை அணிந்திருந்தபோதும் ராகுல் டி-சர்ட் மட்டுமே அணிந்துஅசால்ட்டாக இருந்தது பலரையும் வியக்க வைத்தது. இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் ராகுலை “சூப்பர் ஹியூமன்” என்று அழைத்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சல்மான் குர்ஷித் , “ராகுல் காந்தி ஒரு சூப்பர் ஹியூமன். நாங்கள் குளிரில் உறைந்து ஜாக்கெட் அணிந்து கொண்டிருக்கும் போது, அவர் டி-ஷர்ட் அணிந்துகொண்டு வெளியே செல்கிறார். அவர் ஒரு யோகியைப் போல கவனம் செலுத்தி ‘தபஸ்யா’ (தியானம்) செய்கிறார்.” என்று பாராட்டியுள்ளார்.