ரூ.500 முதல் ரூ.3,000 வரை – தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு

சென்னை: ‘சி’மற்றும் ‘டி’ பிரிவைச் சேர்ந்த அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்ச வரம்புக்குட்பட்டு மிகை ஊதியமும், முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியமாகவும், ‘சி’மற்றும் ‘டி’பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், தனி அனைத்துவகை ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசின் நலத் திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி,

  • ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
  • தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
  • “சி” மற்றும் “டி” பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

மேற்கூறிய மிகை ஊதியம் / பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசிற்கு 221 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.