‘நிர்வாண படங்களை வெளியிடுவேன்’ இளம்பெண் மிரட்டல்: வாலிபர் தற்கொலை

திருமலை: ‘‘நான் கேட்ட பணத்தை தராவிட்டால் நிர்வாண படங்களை யூடியூபில் வெளியிடுவேன்’’ என்று இளம்பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வி.கோட்டாவை சேர்ந்தவர் முரளி(19). கூலித்தொழிலாளி. வேலை முடிந்து வீடு திரும்பும் இவர் செல்போனில் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவாராம். அவ்வாறு பேஸ்புக்கை பார்த்துக் கொண்டு இருந்தபோது சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் புகைப்படத்துடன் ப்ரியாஷர்மா என்ற பெயரில் ‘ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்’ வந்துள்ளது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த முரளி உடனடியாக ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டை ஏற்றுக் கொண்டார். இதை ஏற்றுக்கொண்டதாக அந்த இளம்பெண்ணும் அவருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதன்பிறகு இருவரும் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்தனர். இதையடுத்து இருவரும் தங்களது செல்போன் எண்களை தெரிவித்துக்கொண்டு நண்பர்களானார்கள். இருவரும் தினமும் வீடியோ காலில் நீண்ட நேரம் பேசியுள்ளனர். இதேபோல் நேற்று முன்தினமும் இருவரும் பேசியுள்ளனர். அப்போது அந்த இளம்பெண், வீடியோ காலில் பேசிய முரளியின் வீடியோக்களை நிர்வாணமாக மார்பிங் செய்து அவருக்கு அனுப்பியுள்ளார்.

இதனை பார்த்த முரளி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனடியாக இளம்பெண்ணிடம் தொடர்பு கொண்டு கேட்டார். அதற்கு அவர், நான் கேட்கும் பணத்தை தர வேண்டும். இல்லாவிட்டால் இந்த நிர்வாண படங்களை யூடியூப்பில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதற்கு முரளி, நான் கூலித்தொழிலாளி. என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதை ஏற்காத அந்த இளம்பெண், பணத்தை கண்டிப்பாக தர வேண்டும் என்று எச்சரித்துள்ளார். இதேபோல் நேற்றும் அந்த பெண் மிரட்டியுள்ளார்.

அப்போது அந்த இளம்பெண்ணிடம் பேசிய முரளி, நீ அவ்வாறு செய்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றாராம். அதை அந்த இளம்பெண் கண்டுகொள்ளவில்லையாம். இதனால் மனவேதனை அடைந்த முரளி நேற்றிரவு  தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் வி.கோட்டா போலீசார் வழக்குப்பதிந்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.