தவறுதலாக வங்கிக் கணக்கில் விழுந்த ரூ.1.28 கோடி; திருப்பித்தர மறுத்த இந்தியருக்கு அதே தொகை அபராதம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், தவறுதலாக வங்கிக் கணக்கில் விழுந்த ரூ.1.28 கோடியை இந்தியர் திருப்பித்தர மறுத்ததற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

மருத்துவ வர்த்தக நிறுவனம் ஒன்று தன்னுடைய வணிக வாடிக்கையாளருக்கு ஆன்லைனில் 570,000 திர்ஹம்(ரூ.1.28 கோடி) அனுப்பியபோது அந்தப் பணம் தவறுதலாக இந்தியர் ஒருவருக்கு சென்றிருக்கிறது. இதனை அறிந்த அந்த நிறுவனம், இந்தியரிடம் பணத்தை திருப்பித்தருமாறு கேட்டிருக்கிறது. அவரோ பணத்தை திருப்பித்தர மறுத்திருக்கிறார்.

பணம்

உடனே அந்த நிறுவனம் துபாயின் அல் ரஃபா காவல் நிலையத்தில் புகாரளிக்க, அவரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. ஆனால், பணம் மீட்கப்படவில்லை. பணத்தை அவரும் என்ன செய்தார் என்பதும் தெரியவில்லை. இந்த வழக்கு குற்றவியல் நீதிமன்றத்துக்கு வர, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரி, தவறுதலாகப் பணம் அவருக்குச் சென்றுவிட்டது எனக் கூறி பணப் பரிமாற்ற அறிக்கையை சமர்ப்பித்தார்.

பணத்தை திருப்பித்தர மறுத்த நபருக்கு அதே தொகை அபராதம்

குற்றம்சாட்டப்பட்ட நபர், “என்னுடைய வங்கிக் கணக்கில் ரூ.1.28 கோடி டெபாசிட் ஆனபோது நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன். அந்த பணத்தை என்னுடைய பிற செலவுகள், வாடகைக்கு நான் செலுத்திவிட்டேன். ஒரு நிறுவனம் என்னிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டது. பணம் அவர்களுக்குச் சொந்தமானதா என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் நான் தரமறுத்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

அதையடுத்து, நீதிமன்றம் அந்த நபருக்கு அதே தொகையை அபராதமாகச் செலுத்த உத்தரவிட்டு ஒரு மாதம் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மேலும், தண்டனையின் முடிவில் குற்றம்சாட்டப்பட்ட நபர் நாடுகடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த நபர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறார். இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.