கரோனா பணிக்காலத்தில் பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை: சென்னை மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சென்னை: கரோனா காலத்தில் அரசு ஏற்பாட்டில் தனிமைப்படுத்துதலில் இருந்த பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சக மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது சிகிச்சை அளித்து வந்த அரசு மருத்துவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு சுழற்சி முறையில் பணியில் ஈடுபட ஏதுவாக சுகாதாரத் துறை சார்பில் ஓட்டல்களில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த வெற்றிசெல்வன், தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தார். அந்த மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர்களும் அதே விடுதியில் தங்கியிருந்தனர்.

விடுதியில் தங்கி இருந்தபோது, மருத்துவர் வெற்றிசெல்வன், பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக பெண் மருத்துவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணிராஜனிடம் அளித்த புகார் அடிப்படையில் விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது. விசாரணையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ஃபாருக், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, மருத்துவர் வெற்றி செல்வனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் , 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராதத் தொகையில் இருபதாயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.