முன்னாள் போப் பெனடிக்ட் காலமானார் – வாடிகன் தகவல்

வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மத குருவாக இருந்த பெனடிக்ட் காலமானார். அவருக்கு வயது 95.

ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள மார்க்டி என்ற கிராமத்தில் 1927ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி பிறந்தவர் பெனடிக்ட். இவரது இயற்பெயர் ஜோசப் அலாய்சியஸ் ரட்சிங்கர். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், அந்த மதத்தின் முக்கிய பொறுப்புகள் பலவற்றை வகித்தவர். ஆர்ச் பிஷப், கார்டினல் ப்ரீஸ்ட், கார்டினல் பிஷப், கார்டினல் என பல்வேறு பதவிகளை வகித்த ஜோசப் அலாய்சியஸ் ரட்சிங்கர், கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி போப் ஆக பொறுப்பேற்றார்.

போப் ஆக இருந்த இரண்டாம் ஜான் பாலின் மறைவை அடுத்து போப் ஆக தேர்வான ஜோசப் அலாய்சியஸ் ரட்சிங்கர், பின்னர் பெனடிக்ட் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படலானார். போப் ஆக இவர் தேர்வானபோது இவரது வயது 78. அதிக வயதில் போப் ஆக தேர்வானவர் என இவர் குறிப்பிடப்பட்டார். சுமார் 8 ஆண்டுகள் போப் ஆக இருந்த பெனடிக்ட், வயது முதிர்வு காரணமாக தனது பதவியை கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ராஜினமா செய்தார். போப் பதவியை ராஜினாமா செய்த இரண்டாவது நபராக இவர் அறியப்படுகிறார்.

ராஜினாமாவுக்குப் பிறகு வாடிகன் நகரிலேயே இவர் தங்கி இருந்தார். கடந்த சில நாட்களாக இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர் குணமடைய பிரார்த்திக்குமாறு போப் பிரான்ஸிஸ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், இன்று பெனடிக்ட் உயிரிழந்தார். வாடிகன் நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.