ராஷ்மிகாவைப் புறக்கணிக்கும் 'காந்தாரா' ரிஷப் ஷெட்டி

'வாரிசு' படத்தின் கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா முதன் முதலில் கன்னடத்தில்தான் அறிமுகமானார். 'காந்தாரா' ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற படத்தில்தான் ராஷ்மிகாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் ரிஷப் ஷெட்டி. அந்தப் படம் வெளிவந்து டிசம்பர் 30ம் தேதியுடன் ஆறு வருடங்கள் நிறைவடைந்தது.

அதை முன்னிட்டு அப்படத்தின் படப்பிடிப்புப் புகைப்டங்கள் சிலவற்றைப் பகிர்ந்த ரிஷப் ஷெட்டி, “'கிரிக் பார்ட்டி' வந்து ஆறு வருடங்கள் ஆன பிறகும் உங்கள் சத்தமும், சலசலப்பும், விசில் சத்தமும் பார்ட்டி தந்தது இன்னமும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது, திரும்பிப் பார்க்க வைக்கிறது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் படத்தின் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி, இசையமைப்பாளர் அஜனீஷ் லோகநாத் ஆகியோரை மட்டுமே அதில் 'டேக்' செய்துள்ளார். தப்பித் தவறிக் கூட படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவை டேக் செய்யவில்லை.

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வசூல் சாதனை புரிந்த 'காந்தாரா' படம் குறித்து ராஷ்மிகா எதுவுமே சொல்லவில்லை என்ற சர்ச்சை அந்தப் படம் வெளிவந்ததிலிருந்து இருந்தது. கன்னட சினிமா ரசிகர்கள் அது பற்றி ராஷ்மிகாவை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்தனர். 'காந்தாரா' குழுவினரிடம் பாராட்டியதாக ராஷ்மிகா தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது ரிஷப் ஷெட்டி ராஷ்மிகாவைப் புறக்கணித்துள்ளது அந்த சர்ச்சைக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.