மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த செய்தது என்ன? – பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய கள்ளக்குறிச்சி பள்ளிக்கு உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சியை பள்ளியை முழுமையாக திறக்கும் வகையில் மாணவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இசிஆர் சர்வதேச பள்ளியில் மாணவி மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17-ம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி உடைமைகளை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.பள்ளியை திறக்கக்கோரி தாளாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டிசம்பர் 5-ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளியைத் திறக்க அனுமதியளித்தது.

இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி தரப்பில், “9 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கப்பட்ட பின்பு, எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால், மற்ற வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “இதுபோன்ற சம்பவம் இனி எந்த மாணவருக்கும் நடக்காது என என்ன உத்தரவாதம் உள்ளது? பள்ளியில் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா?” எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில், இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில், “பள்ளி திறப்பட்ட பின்னர், அங்குள்ள நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவசாசம் வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அரசுத் தரப்புக்கு வரும் ஜனவரி 10-ம் தேதி வரை அவகாசம் வழங்கினார். மேலும், பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரும்போது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 10-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.