இந்தியாவில் ஒரே வாரத்தில் 25% அளவுக்கு அதிகரித்த கொரோனா தொற்று: மேற்கு வங்க மாநிலத்தில் 4 பேருக்கு BF.7 வகை கிருமித் தொற்று உறுதி

டெல்லி: இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா கிருமி தொற்று அதிகரித்து வருகிறது. ஒரே வாரத்தில் 25% அளவுக்கு தொற்று அதிகரித்து இருக்கும் நிலையில் கர்நாடக மற்றும் மேற்கு வங்க மாநிலத்திலும் கொரோனா பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் உருமாற்றம் அடைந்த BF.7 வகை கொரோனா தொற்று பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தினமும் லட்ச கணக்கானோரை தொற்றும் இந்த வகை கொரோனாவுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், தென்கொரிய உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியாவில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் கொரோனா பரவல் விகிதம் 25% அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 175 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் பரிசோதனையை அதிகப்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் 4 பேருக்கு BF.7 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் 4 பேரும் வெளிநாடுகளில் இருந்து கொல்கத்தாவுக்கு வந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உருமாறிய கொரோனா தொற்று பாதித்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.