எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த அ.தி.மு.க ஆட்சியில் `சென்னை டு சேலம் பசுமை விரைவு சாலை’ என்ற பெயரில் எட்டு வழிச்சாலை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம், `விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது’ எனத் தீர்ப்பளிக்க, உச்ச நீதிமன்றமோ `திட்டத்தை தொடரலாம்’ என உத்தரவிட்டது. அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக, பிரதான எதிர்க்கட்சி தி.மு.க உட்பட பல கட்சிகள் இதனை எதிர்த்தன. 2021 தேர்தலின்போது தற்போதைய முதல்வர் ஸ்டாலின், `சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது’ என வாக்குறுதியளித்தார்.

இந்த நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க எட்டு வழிச்சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேற்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, “சாலை போடுவதற்கு எப்போதும் தி.மு.க எதிர்ப்பாக இருந்தது என்பதெல்லாம் தவறான செய்தி. அப்படி நாங்கள் எப்போதும் எதிர்ப்பாக இருந்தது கிடையாது” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தில் தி.மு.க இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பரந்தூர் விமான நிலையத்துக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த துடிக்கும் தி.மு.க அரசு, கோவையில் தொழிற்பூங்கா என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை பறிக்க திட்டமிட்டிருக்கும் தி.மு.க அரசு, தற்போது சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருப்பது தி.மு.க அரசின் இரட்டை வேடத்துக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அரசு மருத்துவர்களுக்கான காலமுறை ஊதிய உயர்வு ஆணையை செயல்படுத்துவதாகக் கூறிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், முதலமைச்சரான பிறகு அதுபற்றி வாய் திறக்காமல் இருக்கிறார்.

அது குறித்து போராட்டம் நடத்தினால் அவர்கள்மீது பழிவாங்கும் நடவடிக்கையை தி.மு.க அரசு எடுத்துவருகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, முந்தைய தி.மு.க அரசினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட ஊதிய முரண்பாட்டினை நீக்குவேன் என்று கூறி, அதனை தேர்தல் வாக்குறுதியிலும் சேர்த்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரான பிறகு அதை நிறைவேற்ற மறுக்கிறார். இதுபோன்ற தி.மு.க-வின் இரட்டை நிலைப்பாட்டுக்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. தற்போது சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திலும் இரட்டை நிலைப்பாட்டினை தி.மு.க அரசு எடுத்திருக்கிறது. டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசிய பிறகு, சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை தி.மு.க எதிர்த்தது என்பதும், தற்போது நிலையை மாற்றிக் கொண்டதாக கூறப்படுவதும் சரியானது அல்ல என்று தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் கூறியிருப்பதாக இன்று பத்திரிகைகளில் செய்திகள் வந்திருக்கின்றன.
இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். இது குறித்து 11-6-2018 அன்று சட்டமன்றத்தில் தி.மு.க சார்பில் பேசிய திரு ஐ.பெரியசாமி, `சென்னை முதல் சேலம் வரையான எட்டு வழிச்சாலை மிக அவசியமாக இந்த மக்களுக்கு சோறு போடப் போகிறதா…’ என்று வினவினார். மேலும் அவர் பேசுகையில், `சேலத்துக்கு அருகில் இருக்கக்கூடிய கல்வராயன் மலையாக இருந்தாலும் சரி, அல்லது அதற்கு அருகில் இருக்கக்கூடிய கஞ்சமலையாக இருந்தாலும் சரி, இந்தப் பகுதிகளில் எல்லாம் iron ore இருப்பதாகவும், jindal போன்ற தனியார் நிறுவனங்கள் எதிர்காலத்திலே நம்முடைய தாது வளங்களையெல்லாம் சுரண்டி, ஏற்றுமதி செய்வதற்கு துறைமுகத்தை இணைப்பதற்காகத்தான் இந்தச் சாலையை அமைப்பதற்கான முக்கியத்துவத்தை இந்த அரசு கொடுப்பதாக பேசப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின், `கமிஷன் வாங்குவதற்காக மக்களைப் பற்றி கவலைப்படாமல், விவசாயத்தைப் பற்றி கவலைப்படாமல் 10,000 கோடி ரூபாய் திட்டத்தை கொண்டுவர அரசு முனைப்பாக இருக்கிறது’ என்று குற்றம்சாட்டினார். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, `தி.மு.க-வுக்கு வாக்களித்தால் சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் நிறுத்தப்படும்’ என்று கூறியவர்தான் தி.மு.க தலைவர். மேலும், `இந்தத் திட்டத்தின்மூலம் 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள், காப்புக் காடுகள், மலைகள், பாதிப்படையும்’ என்றும் கூறினார். இது 23-03-2019 நாளிட்ட பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

உண்மைநிலை இப்படி இருக்கும்போது, தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரின் தற்போதைய பேட்டி, தி.மு.க-வுக்கு வர வேண்டியது வந்து விட்டதோ… என்ற சந்தேகத்தை மக்கள் மனதில் எழுப்பியிருக்கிறது. தி.மு.க-வின் இந்த இரட்டை நிலைப்பாட்டுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எதிர்த்த மு.க. ஸ்டாலின், தற்போது தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது குறித்து வாய் திறக்காமல் இருப்பது `மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி’ என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. இந்தத் திட்டம் குறித்த தி.மு.க அரசின் நிலைப்பாட்டினை முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.