திருப்பூர் : பல்லடம் அருகே திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய இளம்பெண்.! உயிரோடு தீ வைத்து எரித்த காதலன்.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே பெத்தாம்பாளையம் ரோட்டில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து உடலில் தீக்காயங்களுடன் இளம்பெண் ஒருவர் “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அலறிய படி பிரதான சாலைக்கு ஓடி வந்தார். 

அந்த வழியே சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அந்த பெண்ணின் உடலுக்கு தீ வைத்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயன்ற அந்த வாலிபரும் கீழே விழுந்து காயமடைந்தார். 

இதைப்பார்த்த போலீசார் அவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில், அந்த பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் அந்த பெண்ணின் பெயர் பூஜா என்பதும் தெரியவந்தது. மேலும், இவர் பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் இப்ராகிம் என்பவரின் வீட்டில் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். அங்கு   லோகேஷ் என்பவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இருவரும் பல்லடம் அருகே பெத்தாம்பாளையம் ரோட்டில், சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது பூஜா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த லோகேஷ் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பெட்ரோலை பூஜா மீது ஊற்றி தீ வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதைதொடர்ந்து பூஜா மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மோசமான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பூஜா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.