பொங்கல் பரிசு டோக்கன் கிடைக்கலையா? – உடனே இத பண்ணுங்க!

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் கிடைக்காதவர்கள், ரேஷன் கடைகளுக்க நேரடியாகச் சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், தகுதி வாய்ந்த அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும். ஆனால், கடந்த முறை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை.

அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நிலவின.

இதற்கிடையே 2023 ஆம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் வரும் 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான டோக்கன் வினியோம் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த முறை போல் இந்த முறை எந்த குளறுபடியும் நடக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு மிகத் தீவிரமாக உள்ளது. இதற்காக பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்திற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் வீடு தேடி வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் டோக்கன்களை நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. டோக்கன் கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கார்டை காண்பித்து நியாய விலை கடைகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.