சென்னையில் உள்ள பகவான் மஹாவீர் அறக்கட்டளை நலிவடைந்த மற்றும் பின் தங்கியவர்களுக்குத் தன்னலமற்ற சேவைகளை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் சமுதாயத்தின் சார்பாக மரியாதை மற்றும் நன்றியை வெளிப்படுத்தி பாராட்டி வருகின்றது.
‘மஹாவீர் விருது’ என்ற பெயரில் அகிம்சை மற்றும் கொல்லாமை, கல்வி, மருத்துவம், சமூக மற்றும் சமுதாயச் சேவை துறைகளில் சிறப்பாகச் சேவை புரிபவர்களுக்கு விருதினை வழங்கி சிறப்பித்து வருகின்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி விருது பெற்றவர்களின் பெயர்களை அறிவித்துப் பேசியபோது,
‘‘26-வது மஹாவீர் விருது பெறும் 4 விருதாளர்களைச் சேர்த்து 23 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் இருந்து இதுவரைவில் 88 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளுக்கு 16 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதிக விருதுகள் பெற்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அகிம்சை மற்றும் கொல்லாமை பிரிவு விருது புதுடெல்லியில் உள்ள த்யான் அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது. பசு உட்படக் கிட்டதட்ட 70000 விலங்குகளை இந்தியா முழுவதிலும் 43 விலங்குகள் நல மையங்கள் மூலம் பராமரித்து வருகிறது. இந்த அமைப்பு பசுவைக் காப்பாற்று, நாய்க்கு உணவிடு, குரங்கிற்கு உதவு, பறவையுடன் நட்பு எனப் பல விலங்கியல் நலங்களை முன்வைத்து இயங்குகிறது.
அடுத்துக் கல்வி துறை விருது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூகத்தின் நண்பர்கள் அமைப்புக்கு வழங்கப்படுகிறது. இவ்வமைப்பு கிராமங்களில் ஏகல் பள்ளி என்றழைக்கப்படும் ஓராசிரியர் பள்ளியை நிர்வகித்து வருகிறது. 6 வயதில் இருந்து 26 இலட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் இந்த பள்ளிகளில் பயின்று வருகிறார்கள்.

மேலும், மருத்துவத் துறை விருது சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஜன் ஸ்வஸ்த்யா சஹ்யாக் அமைப்புக்கு வழங்கப்படுகின்றது.
கிராம மற்றும் பழங்குடியின சமுதாயத்தினருக்கு மருத்துவச் சேவைகளை வழங்குகிறது. இதற்காகப் பின்பற்றப்படும் மூன்று அடுக்குத் திட்டத்தில், முதல் அடுக்கு வீட்டுக்கு வீடு மருத்துவப் பாதுகாப்பு வழங்குவது. இது 72 கிராமங்களில் 41000 வீடுகளில் அதிலும் பழங்குடியினத்தவர்களுக்கு வழங்கியது. கனியாரி கிராமத்தில் 100 படுக்கை வசதிகளுடன் அமைந்துள்ள மருத்துவ மையம் நவீன உபகரணங்களுடன் சகல விதமான மருத்துவ வசதிகளுடனும் அமைந்து மிகவும் குறைந்த கட்டணத்தில் இயங்கி வருகிறது. சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 2500 கிராமங்களில் உள்ள மக்கள் இங்கே மருத்துவ வசதி பெற்றுப் பயன் அடைந்திருக்கிறார்கள்.
சமூக மற்றும் பொதுநலச் சேவை விருது மேகாலயாவைச் சேர்ந்த நாங்ஸ்டோயின் அமைப்புக்கு வழங்கப்படுகிறது. இவ்வமைப்பு வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் மற்றும் நலிவடைந்த மக்களுக்கு உதவியாக விவசாயப் பயிற்சி வழிகாட்டுதல், திறமைகளை மேம்படுத்த பயிற்சியளித்தல், பொருளாதார மேம்பாடு, குழந்தைகள் பெண்கள் இளைஞர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி அவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு எனப் பலவகையிலும் பயிற்சியளிக்கிறது. 39000 குழந்தைகளுக்கு உதவி வருகிறது.
40 கிராமங்களைச் சேர்ந்த 1000 விவசாயிகளுக்கு நேரடியாக இயற்கை விவசாய முறைகளை மேற்கொள்ள அறிவுறுத்திப் பயிற்சியளிக்கிறது. இதன் மூலம் விவசாயச் சந்தையில் விவசாயிகள் பயன்பெற உதவுகிறது. சோபாரு கிராமத்தைச் சேர்ந்த மக்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் மூலிகை மருத்துவப் பள்ளிகள் பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பாதுகாக்கின்றன. ஆக, நான்கு துறைகளில் சிறப்பாகச் சேவை செய்தவர்களுக்கு விருதுகள் சென்று சேர்ந்துள்ளன’’ என்று தெரிவித்தார்.
அவரிடம் நஞ்சில்லா உணவு உற்பத்திக்காகவும் விவசாயிகளுக்குக் குறைந்த செலவில் நல்ல வருமானம் பெற இயற்கை வேளாண்மையை முன் எடுத்துச் செல்லும் விவசாயிகளும் சேவை அமைப்புகளும் உள்ளன. அவர்களுக்கும் விருதுகள் வழங்கலாமே? என்று கேட்டோம்.
‘‘நல்ல ஆலோசனை; இயற்கை வேளாண்மை என்பதும் ஒரு வகையில் அகிம்சை கொல்லாமைதான். வருங்காலத்தில் இயற்கை வேளாண்மை பிரிவிலும் விருது வழங்க திட்டமிடுகிறோம்’’ என்றார் முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி.
பகவான் மஹாவீர் அறக்கட்டளையின் அறங்காவலர் என்.சுகால்சந்த் ஜெயின் பேசும் போது, ‘‘ஒவ்வொரு விருதும் ரூ.10 இலட்சம் ரொக்கம் நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழை உள்ளடக்கியது. 26-வது மகாவீரர் விருதுகளுக்கு 324 விண்ணப்பித்ததில் 4 விருதாளர்கள் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான M.N வெங்கடாசலய்யா அவர்கள் தலைமையிலான தேர்வுக் குழுவினர் தேர்ந்து எடுத்தனர்.

இக்குழுவின் எஸ் குருமூர்த்தி, துக்ளக் ஆசிரியர், ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குநர், பேராசிரியர் பி.எம். ஹெக்டே, சேர்மன், பாரதீய வித்யா பவன் மங்களூர் கேந்திரம், டி.எஸ் கிருஷ்ணமூர்த்தி, இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர், டி.ஆர். மேத்தா,IAS (ஓய்வு) – முன்னாள் சேர்மன் SEBI, நீதிபதி ஜி.எஸ் சிங்வி இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, பிரபாத் பிரபாத் குமார், முன்னாள் அமைச்சரவை செயலாளர், இந்திய அரசு, பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன், சேர்மன், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பூஜ்ய ஆச்சார்ய ஸ்ரீ சந்தனாஜி மஹராஜ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
மேலும், பகவான் மகாவீரர் அறக்கட்டளை 27-வது மகாவீரர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. அகிம்சை மற்றும் கொல்லாமை, கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மற்றும் சமுதாயச் சேவை துறைகளில் தனியாகவோ (அ) நிறுவனமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை அறக்கட்டளையின் இணையத் தளமான www.bmfawards.org மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’’ என்று அழைப்பு விடுத்தார்.