பிரதமர் மோடி பாதுகாப்பில் மீண்டும் குளறுபடி!

கர்நாடக மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க திறந்த காரில் வந்த பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி மாலையுடன் பாய்ந்த இளைஞர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் நடைபெறும் இளைஞர் தின விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று வந்தார். அங்குள்ள தார்வாட் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பேரணியாக சென்றார்.

காரின் கதவை திறந்து பக்கவாட்டில் நின்றபடி தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு பிரதமர் நரேந்திர மோடி வந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அருகில் அனைத்து பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி இளைஞர் ஒருவர் பிரதமருக்கு மாலை அணிவிக்க ஓடி வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட பாதுகாவலர்கள், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி இழுத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி பரவி வருகிறது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆளும் மாநிலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி பேரணியில் இவ்வளவு பெரிய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவிக்க வந்த இளைஞரை பிடித்து கர்நாடக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.