உளவு துறைக்கு வந்த ‘அந்த’ தகவல்; அண்ணாமலைக்கு இசட் பாதுகாப்பு!

தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போதைய மத்திய அமைச்சர் எல்.முருகன் இருந்தபோது கர்நாடக ஐபிஎஸ் அதிகாரியும், கரூர் மாவட்டத்தை சேர்ந்தவருமான அண்ணாமலை விருப்ப ஓய்வு பெற்று திடீரென பாஜகவில் இணைந்தார். கட்சியில் அண்ணாமலை சேர்ந்ததும் அவருக்கு பாஜக மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இதன் பின்னர், எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, அந்த பொறுப்புக்கு மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அதிரடி அரசியல் மூலம் பாஜகவை வளர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு அரசு குறித்தும், அமைச்சர்கள் தொடர்பாகவும் அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகிறார்.

மேலும் திமுக குறித்தும், திமுகவின் வாரிசு அரசியல் குறித்தும் கடுமையாக பேசி வருவதோடு சமீபத்தில் ரபேல் வாட்ச் குறித்து அண்ணாமலை அளித்த பேட்டி, பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அண்ணாமலை வந்தது முதல், இது போன்ற சர்ச்சைகளில் சிக்கி வந்ததால், அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு கண்காணித்து வருகிறது. ஒய் பாதுகாப்பு பிரிவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் தேசிய பாதுகாப்பு படை எனும் சிறப்பு பிரிவை சேர்ந்த 1 அல்லது 2 வீரர்கள் உள்பட 8 போலீசார் இடம் பெற்று இருக்கின்றனர்.

ஒய் பாதுகாப்பு பிரிவை பொறுத்தவரை 1 அல்லது 2 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பாதுகாப்பு பணிக்கு மட்டும் ஒரு தனிப்படைக்கு மாதம் ரூ. 12 லட்சத்துக்கு செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் பாஜக தலைவரான அண்ணாமலைக்கு மாவோயிஸ்டுகள் மற்றும் மத தீவிரவாதிகளிடம் இருந்து மிரட்டல்கள் வருவதாக உளவு துறைக்கு ரகசியமான தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, இனி 20க்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர். அண்ணாமலை வீடு மட்டும் இல்லாமல் அண்ணாமலை தங்கும் அல்லது செல்லும் இடங்களில் எல்லாம் 24 மணி நேரமும் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

மாவோஸ்டுகளிடம் இருந்தும், மத தீவிரவாதிகளிடம் இருந்தும் அண்ணாமலைக்கு மிரட்டல் வந்ததால் இந்த பாதுகாப்பு வழங்க உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மத்திய உள்துறையை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் அண்ணாமலை வீடு உள்ளிட்ட இடங்களில் வந்து சோதனை செய்து அதற்கான ஒப்புதலாக கையெழுத்தும் அண்ணாமலையிடம் பெற்று சென்று உள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.