மகர ஜோதி கட்டுப்பாடுகள் அமல்; கேரளா அரசு அதிரடி நடவடிக்கை!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் சுயம்பு லிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளை கொண்டது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் 4 முதல் 5 கோடி வரையிலான பக்தர்கள் வருகை தந்து ஐயப்பனை தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த கோயிலில் மண்டல பூஜை முடிந்ததை அடுத்து நாளை 14ம் தேதி சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. மகர ஜோதி தரிசனத்தை காண நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கு அதிகமாக உள்ளது. மகர ஜோதி தரிசனம் நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் நெரிசல் இன்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், பாதுகாப்புப் பணிக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சன்னிதானம் மற்றும் சபரி மலை முழுவதும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெரிசல் இன்றி சன்னிதானம் செல்லவும் அங்கு 18ம்படி ஏறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை சபரி மலை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

இதற்காக நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் வரை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். நேற்று முதல் இவர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களை தவிர பேரிடர் மீட்பு படையினர், சுகாதார துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசன நாளான நாளை 14ம் தேதி மதியம் 12 மணி வரை மட்டும் சன்னிதானம் செல்ல சபரிமலை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போன்று 12 மணிக்கு மேல் எந்த காரணம் கொண்டும் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். 14ம் தேதி இரவு 8.45 மணிக்கு மகர சங்ரம பூஜை நடக்கிறது.

மறுநாள் ஜனவரி 15ம் தேதி முதல் பக்தர்கள் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு துவங்கி இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மகர விளக்கு தரிசன நிகழ்ச்சி நாளை மாலை நடக்கிறது. அப்போது ஐயப்பன் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதியாய் காட்சி அளிப்பார். அப்போது பக்தர்கள் சரண கோஷம் விண்ணை பிளக்கும்.

மகர ஜோதியை தரிசிப்பதற்கு கடந்த 2 நாட்களாகவே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஜோதியை தரிசிக்க காட்டு பகுதியில் முகாமிட்டு தங்கி உள்ளனர்.

நாளை ஜோதி தரிசனம் முடிந்த பின்னரே, அவர்கள் மலை இறங்குவார்கள். இதனால் சன்னிதானத்திலும், காட்டு பகுதிகளிலும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் தங்கி உள்ளதால் நாளை சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் நாளை பகல் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.