மர்ம நோயால் வான்கோழிகள் இறப்பு ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் பறவை காய்ச்சல் தாக்குதல்?

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதியில் கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பில் விவசாயிகளும், கிராம மக்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பேட்மாநகரம் பத்மநாபமங்கலம் பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான கோழிகளும், காக்கைகளும் திடீரென இறந்தன. இதேபோல் ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மர்ம நோயால்  கோழி, வான்கோழி, காக்கை  உள்ளிட்ட பறவைகள்  பலியானது. தகவலின் பேரில் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் தலைமையிலான பணியாளர்கள் நோய்வாய்ப்பட்ட கோழிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட கால்நடைகள் நோய் புலனாய்வு பிரிவு மூலம் இறந்த கோழிகளை பிரேத பரிசோதனை செய்து இறப்பிற்கான காரணத்தை அறிய ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், பறவை காய்ச்சல் காரணமாக கோழிகள் இறந்துள்ளதா என கால்நடை துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். பறவைகளின் உயிரிழப்புகள் தொடர்வதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.