புதுக்கோட்டை மாவட்டத்தை அடுத்த இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கைவயல் பகுதியில் பட்டியல் சமூகத்தினர் வசித்து வரும் நிலையில் அவர்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மலம் கழிந்த விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. குடிநீர் தொட்டியில் இருந்த நீரை குடித்ததில் குழந்தைகள் உட்பட பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்கும் நோக்கில் தொட்டியில் கலக்கப்பட்ட மலம் மரபணு சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு வெள்ளனூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்ற வருகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை என அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி இருந்தனர். இந்த நிலையில் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யும் நோக்கிலும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.