செங்கல்பட்டு மாவட்டத்தில் ராட்சத அலையில் சிக்கி ஒன்பதாம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் அத்திபலே பகுதியை சேர்ந்தவர்கள், ஆன்மீக யாத்திரைக்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்ற அவர்கள், நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றனர்.
அப்பொழுது அனைவரும் அங்கு சுற்றிப் பார்த்துவிட்டு கடலில் குளித்துள்ளனர். இதில் பெற்றோர்களுடன் சுற்றுலா வந்த 15 வயதுடைய ஒன்பதாம் வகுப்பு மாணவி சுஷ்மிதா என்பவர் கடலில் குளித்த போது எதிர்பாராத விதமாக ராட்சத ஆலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாமல்லபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சுஷ்மிதாவை கடலில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவரது உடல் கிடைக்காத நிலையில், அவரது உடல் மாமல்லபுரம் தெற்கு கடல் பகுதியில் கரை ஒதுங்கியது.
இந்நிலையில் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சுற்றுலா வந்தவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.