பழனி முருகன் கோயில் குடமுழுக்கு வழக்கு… தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் சொன்னது என்ன?

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “பழனி முருகன் கோவில் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோயில் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ் கடவுள் முருகன் எனப் போற்றப்படும் பழனி முருகன் கோவில் குடமுழுக்கை தமிழில் மந்திரம் ஓதி நடத்துவதே சிறப்பானதாகும்

தமிழில் ஏராளமான மந்திரங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே குடமுழக்கின்போது மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் ஓதப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழ் நாட்டிலுள்ள அனைத்து கோவில் குடமுழுக்குகளிலும் தமிழில் மந்திரம் ஓத வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவானது பழனி முருகன் கோவிலுக்கும் பொருந்தும். மேலும் தஞ்சை பெரிய கோவிலிலும் தமிழில் மந்திரம் கூறி குடமுழுக்கு நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே அதன் அடிப்படையில் பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கின்போது தமிழில் மந்திரம் ஓதுவதற்கு உத்தரவிட வேண்டும்.” என்று தமது மனுவில் தமிழ் ராஜேந்திரன் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘முருகன் தமிழ் கடவுள் ஆவார். எனவே தமிழில் மந்திரம் ஓதுவதற்கு எந்த தனிநபரும் அரசாங்கத்திற்கு கருத்து கூற வேண்டியது இல்லை. தமிழ்நாடு அரசு பழனி முருகன் கோவிலின் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதப்படுகிறதா என்பது குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.