சுய லாபத்துக்காக அன்று ஆட்சியை அடகு வைத்தவர்கள் இன்று கட்சியை அடகு வைத்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என அதிமுக குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் போரூரை அடுத்த காரம்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், உதயநிதி ஸ்டாலின் துணை பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது…
என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு முதல் உரை எழுதியது மதுரவாயல் தொகுதி தான். நான் பேசியதையெல்லாம் டி.ஆர்.பாலு ஞாபகம் வைத்துள்ளார். அவரது அனுபவம், நினைவாற்றல் குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அவர் பொருளாளராக உள்ளார். பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டங்கள் மூலம் பல கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைஞருக்கும் பேராசிரியருக்குமான நட்பு அவர்களுக்கு அப்புறம் மூன்று தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது. வெற்றி தோல்வி என பல்வேறு நேரங்களில் கலைஞருக்கு உறுதுணையாக பேராசிரியர் இருந்துள்ளார். கலைஞருக்கு பின் மு.க.ஸ்டாலின் தான் என்று கூறி பெருமைப்படுத்தியவர் பேராசிரியர்.
சுய லாபத்திற்காக டெல்லியிடம் ஆட்சியை அடகு வைத்தவர்கள் இன்று கட்சியை அடகு வைத்து தவித்து கொண்டிருக்கிறார்கள். அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துபவர்கள் அண்ணாவையே மறந்து விட்டார்கள். ஆளுநருக்கு தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். தமிழகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் யார் என்பதை காட்டியுள்ளார். சட்டப் பேரவையில் ஆளுநர் கோபித்துக் கொண்டு சென்றதை தான் பார்த்தீர்கள். அவருக்கு முன்பாக இரண்டு கூட்டம் சட்டப் பேரவையை விட்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விட்டார்கள்.
பாஜக ஆட்சி அமைத்து ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. அவர்கள் செய்தது என்னவென்று பார்த்தால் மக்களிடைய பிரிவினையை ஏற்படுத்துவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. எம்.பி., எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குகிறார்கள். அது தமிழ்நாட்டில் நடக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். அதற்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு பகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க எதிர் தரப்பினர் எதிர்மறை பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்கள் அதை நாம் முறியடிக்க வேண்டும்.
பேராசிரியர் நூற்றாண்டுக்கு இது நிறைவு நாள் பொதுக்கூட்டம். ஆனால், இந்த கூட்டம் தான் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு முதல் கூட்டம். ஒடிசாவில் விளையாட்டுத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1500 கோடி ஒதுக்குகிறார்கள். தமிழ்நாட்டில் ரூ.25 கோடி தான். அதிக நிதி பட்ஜெட்டில் ஒதுக்குமாறு முதல்வருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று டி.ஆர்.பாலுவிடம் கோரிக்கை வைத்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
