உத்தரப்பிரதேசத்தில், அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் மணமகனின் குடும்பத்தார் மறைத்த விஷயத்தை கண்டுபிடிக்க, மணமகளின் அண்ணன் செய்த செயலால், உண்மை தெரியவந்தது. இதனால் திருமணமே நின்றுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், பருச்சாபாத் மாவட்டத்திலுள்ள கோத்வாலி கிராமத்தில் ஜனவரி 19-ம் தேதியன்று ஒரு திருமணம் நடைபெற இருந்தது. அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திருமணத்தில், திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு மாப்பிள்ளை குதிரைமேல் ஊர்வலம் வர சடங்கு, சம்பிரதாயங்கள் நடந்தன.
இப்படி நல்லபடியாக எல்லாம் நடந்துகொண்டிருந்த நிகழ்ச்சியில், மணமகளின் அண்ணனுக்கு திடீரென மாப்பிள்ளை படித்தவரா, படிக்காதவரா, அவர்கள் பொய் சொல்லி திருமண வேலைகள் செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்தது.

அதன் பிறகு மாப்பிள்ளை படித்தவரா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு வழி கண்டுபிடித்த மணமகளின் அண்ணன், பூசாரியிடம் 10 ரூபாய் நோட்டு கட்டுகளைக் கொடுத்து, மாப்பிள்ளையை எண்ணித்தருமாறு கூறியிருக்கிறார். பூசாரியும் மாப்பிள்ளையிடம் அதைக்கொடுக்க, மாப்பிள்ளையோ அதனைச் சரியாக எண்ண முடியாமல் தடுமாறியிருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் குடும்பத்தினர், மாப்பிள்ளை படித்திருக்கிறார் என்று அவர்கள் பொய் சொல்லியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதன் காரணமாக மணமகளும், `படிக்காதவரைத் திருமணம் செய்ய மாட்டேன்’ எனக் கூற, மணமகன் குடும்பத்தினர் போலீஸில் புகாரளித்தனர். அதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரி கம்தா பிரசாத் அங்குவந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் மணமகன் வீட்டினர் உண்மையை மறுத்துவிட்டனர் எனக் கூறிய மணமகளின் குடும்பத்தினர், தங்களுடைய மகள் அவரை திருமணம் செய்துகொள்ளமாட்டாள் என உறுதியாகக் கூறிவிட்டனர்.