இது தான் சரியான மரியாதை: மோடியை பாராட்டிய ஆர்.என்.ரவி

அந்தமானில் 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டியது தீர நெஞ்சங்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மரியாதை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

நேற்று (ஜனவரி 23 ) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி, அந்தமான் நிகோபாரின் 21 தீவுகளுக்கு, ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார்.

சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள், பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2021ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்படி நேதாஜியின்126ஆவது பிறந்தநாள் நேற்று பராக்கிரம தினமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அந்தமான்-நிகோபாரில் உள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு, ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார்.

அதன்படி அந்த தீவுகளுக்கு ஜதுநாத் சிங், ராம் ரகோபா ராணே, கரம் சிங், சோம்நாத் சர்மா, ஜோகிந்தர் சிங்,தன்சிங் தாபா, குர்பச்சான் சிங், பிருசிங், ஆல்பர்ட், ஆர்திசிர், அப்துல் ஹமீது, ஷிதான் சிங், ராமசாமி பரமேஸ்வரன், நிர்மல்ஜித் சிங், அருண்,ஹோஷியார் சிங், மனோஜ் பாண்டே,விக்ரம் பத்ரா, பணா சிங், யோகேந்திர சிங், சஞ்சய் குமார் ஆகியோரது பெயர்கள் சூட்டப்பட்டன.

அந்த நிகழ்வில் பேசிய மோடி, “அந்தமான் – நிகோபாரின் 21 பெரிய தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருதாளர்களின் பெயர்களை வைத்திருப்பதன் மூலம் நாம் அளிக்கும் செய்தி ஒன்றுதான். ‘ஒரே பாரதம்; சிறந்த பாரதம்’ என்பதுதான் அது. பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் ஒரே தீர்மானம் ‘முதலில் இந்தியா’ என்பதுதான். அவர்களின் பெயர்களை வைத்திருப்பதன் மூலம் அவர்களின் தீர்மானம் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும்” என தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநர், அந்தமான் நிகோபாரில் உள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயரை சூட்டிய பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியை போற்றினார். இது அந்த தீர நெஞ்சங்களுக்கு பொருத்தமான, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மரியாதை என்று ஆளுநர் குறிப்பிட்டார்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.