ஃபாஸ்டேக்: மின்னணு சுங்க வசூல் 46% அதிகரிப்பு!

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. இங்கு கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசலும், நேர விரயமும் ஏற்படுகிறது.

இதனை களையும் பொருட்டு,
ஃபாஸ்டேக்
எனும் மின்னணு முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த ஃபாஸ்டேக் முறை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஃபாஸ்டேக் மூலம் 2022ஆம் ஆண்டி மின்னணு சுங்க வசூல் 46 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாக ஃபாஸ்டேக் மூலம் மின்னணு சுங்கச்சாவடி வசூல் நிலையான வளர்ச்சியை கண்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டில் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் உட்பட ஃபாஸ்டேக் மூலம் மொத்த சுங்க வசூல் ரூ.50,855 கோடியாக இருந்தது. இது 2021 ஆம் ஆண்டின் ரூ.34,778 கோடியுடன் ஒப்பிடுகையில் சுமார் 46 சதவீதம் அதிகமாகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 டிசம்பர் மாதத்தில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலம் வசூலான தினசரி சராசரி ரூ.134.44 கோடியாகும். டிசம்பர் 24ஆம் தேதி மிக அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.144.19 கோடி வசூலாகியிருந்தது. இதேபோல ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் 2022 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 48 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 219 கோடியாகவும், 2022ஆம் ஆண்டில் 324 கோடியாகவும் இருந்தது.

இதுவரை 6.4 கோடி ஃபாஸ்டேக் வழங்கப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ஃபாஸ்டேக் பயன்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 1181 (323 மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் உட்பட). 2021ஆம் ஆண்டில் இது 922 ஆக இருந்தது. ஃபாஸ்டேக் திட்டத்தின் கீழ் மாநில சுங்கச்சாவடிகள் செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 29 மாநில நிறுவனங்கள் மற்றும் ஆணையங்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.