உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் நாளை வெளியாகிறது

ஆயிரத்திற்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் நாளை வெளியாகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு
குடியரசு தினத்தை ஒட்டி 1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் நாளை வெளியிடப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழியில் வெளியிடப்பட வேண்டும் என கருத்து கூறியிருந்தார்.
image
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது வரவேற்பினை தெரிவித்து இருந்தனர். இதனை அடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக தமிழ் இந்தி குஜராத்தி ஒடியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு பணிகளை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தின் அலுவல்கள் தொடங்கியவுடன வழக்கறிஞர்களிடம் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத்தின் மின்னணு துறை சார்பாக சுமார் 34,000 தீர்ப்புகள் தனியாக தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் இலவசமாக இந்த தீர்ப்புகளை மக்கள் பார்க்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார். மேலும் 1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருப்பதாகவும் நாளை குடியரசு தினத்தை ஒட்டி இந்த தீர்ப்புகள் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புகளும் பிராந்திய மொழிகளில் வெளியிடப்படுவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் வழக்கறிஞர்கள் இந்த விவகாரத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.